Monday 18 March 2013

குரங்கு


குன்று காடு ஊர்ப்புறங்களில்
குரங்குக் கூட்டம் வாழும்
கோயில்களில் தோப்புகளில்
கும்பலாகச் சூழும்

ஒன்றையன்று துரத்திக் கொண்டு
ஓடி மரத்தி லேறும்
ஓட்டுதற்கு எவர் சென்றாலும்
"உர்... உர்..." என்றே சீறும்

குட்டியினை மார்பிலணைத்துக்
கொண்டே எங்குந் திரியும்
கொம்பு விட்டுக் கொம்பு தாவி
குதித்தே விந்தை புரியும்

பட்டுத்தலை மயிர் விலக்கிப்
பார்த்துப் பேனை பொறுக்கும் !
பரபரப்பாய் உடலைச் சொறிந்த
படி திரிந்தே இருக்கும்

கொம்பிலேறி நின்று குதித்துக்
குதித்து அதனை உலுக்கும்
கோபம் வந்தால் கத்திக் கடித்துக்
குதறும் : சண்டை வலுக்கும்

கம்பெடுக்கும் குரங்காட்டியின்
கட்டளைபோல் நடக்கும்
காண்பவர்க்கு வியப்பு வந்து
கண்களிலே கிடக்கும்.

திட்டக்குடி முத்துமுருகன்

No comments:

Post a Comment