Thursday 17 January 2013

அச்சம் தவிர்


ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று சாவகாசமாக எழுந்திருக்கலாம் என்று நினைத்த கோகுல் திடீரென்று சேகர் மாமாவின் குரல் கேட்டு விழித்துக் கொண்டான். கோகுலின் அம்மா கல்யாணியின் அண்ணன்தான் சேகர். வியாபார வி­யமாக வருபவர் கோகுலுக்குப் பிடித்த பலகாரங்களை வாங்கி வருவார். அவனுக்குப் பிடித்த சினிமாவுக்குக் கூட்டிப் போவார். மாமா ஊரிலிருக்கும் வரையில் கோகுலுக்கு உற்சாகம் சிறகடிக்கும். மகிழ்ச்சியாகப் பொழுது கழியும்.
சென்ற முறை சேகர் மாமா வந்திருந்தபோது மாமா அடுத்தமுறை வரும்போது எப்படியும் என்னோடு பத்து நாட்களாவது இருக்க வேண்டும் என்று கோகுல் கேட்டுக் கொண்டான். அவனது மாமாவும் சரி என்று சொல்லியிருந்தார்.
மாமாவைப் பார்க்கும் ஆசையோடு படுக்கையிலிருந்து எழுந்து ஓடி வந்தவன் அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டான். அவன் நின்றதற்கு காரணம் சேகர் மாமாவின் கையிலிருந்த வெள்ளை நாய்க்குட்டி.
சேகருக்கு நாய் என்றாலே பயம்! தெருவில் போகும்போது தூரத்தில் நாயைக் கண்டாலே கோகுலுக்கு கை, கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து விடும். கடந்த ஒரு வாரமாக தெருமுனையில் இருக்கும் கடைக்குக்கூட அவன் போவதில்லை. காரணம் அந்தக் கடையின் அருகில் கறுப்பு நாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.
அம்மா கோகுலிடம் மளிகை சாமான் ஏதேனும் வாங்கி வரச் சொன்னால் தெரு முனையில் இருக்கும் கடையை விட்டு விட்டு மாற்று வழியாக அடுத்த தெருவிலிருந்த கடையில்தான் சாமான் வாங்கிக் கொண்டு வருவான்.
தெருமுனையிலிருக்கும் கடைக்குப் போய்விட்டு வர எதற்கு இவ்வளவு நேரம்? என்று இரண்டு நாட்கள் முன்பு அம்மா அவனிடம் கேட்டபோதுதான் அம்மாவிடம் நாயைப் பற்றிச் சொன்னான்.
ஏண்டா கோகுல் பதிமூணு வயசாச்சு உனக்கு. உன்னைவிடச் சின்னக் குழந்தைங்க எல்லாம் நாய்க்கு பயப்படாமப் போகுது. உனக்கு மட்டும் என்ன பயம்...? என்று அம்மா கல்யாணி கேட்டாள்.
அந்த நாய் என்னைக் கண்டதும் என்கிட்டே ஓடிவந்து என்னோட காலை முகந்து பார்க்குது. அது என்னைக் கடிச்சுடுமோன்னு பயமாயிருக்கும்மா. நான் கடைக்குப் போய்வர லேட்டாகுதுன்னா இனி நீயோ அப்பாவோ கடைக்குப் போய் வாங்கிக்கோங்க. கோகுல் அம்மாவிடம் தீர்மானமாகச் சொல்லி விட்டான்.
ஆனால் இன்று அவனுக்கு ரொம்பவும் பிடித்த சேகர் மாமா வீட்டுக்குள்ளேயே நாய்க்குட்டியை எடுத்து வருவார் என்று அவன் எதிர்பாக்கவேயில்லை. மாமாவின் கையில் நாய்க்குட்டியைப் பார்த்தவன், மாமாவிடம் சரிவர பேசக்கூட இல்லை. ஓடிச்சென்று படுக்கை அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
நாய் என்றாலே எனக்கு பயம் என்று தெரிந்தும் மாமா நாய்க்குட்டியைக் கொண்டு வந்துவிட்டாரே என்று அவனுக்கு கோபம் வந்தது. சேகர் மாமா பலமுறை கோகுலை அழைத்தும் அவன் வெளியே வரவேயில்லை. சிறுது நேரம் கழிந்தது.
கோகுல் நாய்க்குட்டியைக் கட்டிப் போட்டுட்டேன் என்று வெளியிலிருந்து மாமா குரல் கொடுத்த பிறகுதான் அவன் மெதுவாக வெளியே வந்தான். சேகர் மாமா நாய்க்குட்டியை சிறிய தோள் பட்டையால் வராண்டாவில் கட்டிப் போட்டிருந்தார். அதன் அருகில் இருந்த கிண்ணத்தில் கொஞ்சம் பாலும் இருந்தது. வெள்ளை நிறத்திலிருந்த அந்த நாய்க்குட்டி பாலைக் குடித்துவிட்டு வக் வக் வக் என்று குரைத்தபடி வராண்டாவையே சுற்றி சுற்றி வந்தது. கோகுல் நாய்க்குட்டியின் அருகே செல்லவேயில்லை. தூரத்திலிருந்தபடியே நாய்க்குட்டியைப் பார்த்துப் போனான். இரண்டு நாட்கள் இப்படியே கழிந்து விட்டன.
மறுநாள் சேகர் மாமா கோகுலிடம் நாய்க்குட்டிக்கு பால் கொண்டு வைக்கும்படிச் சொன்னார். இரு நாட்கள் நாய்க்குட்டியைப் பார்த்து பழகிவிட்டதால் கோகுலுக்கு ஓரளவு தைரியம் வந்திருந்தது. அவன் கிண்ணத்தில் கொஞ்சம் பாலை எடுத்துக் கொண்டு போய் நாய்க்குட்டியின் அருகில் வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டான்.
 கோகுல் நாய்க்குட்டியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கோகுல் எதிர்பார்க்காதபடி நாய்க்குட்டியை அவிழ்த்து விட்டார் சேகர் மாமா. நாய்க்குட்டி அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தது. வீல் என்று அலறிய கோகுல் பயந்து போய் நாற்காலி மீது ஏறி நின்று கொண்டான்.
கோகுல் நாய்க்குட்டி உன்னை ஒன்றும் செய்யாது. நீ பேசாமல் தரையில் இறங்கி நில்லு என்று அவனுக்குத் தைரியம் சொன்னார் சேகர் மாமா. ஆனால் கோகுல் நாற்காலியை விட்டு கீழே இறங்கவில்லை. ஆனால் அடுத்து வந்த இரண்டு நாட்களில்  கோகுலுக்கு நாயக்குட்டி மீதான பயம் இன்னமும் குறைந்து விட்டது. அவன் நாய்க்குட்டியின் அருகில் சென்று அதன் முதுகில் தடவிக் கொடுக்கும் நிலைக்கு வந்திருந்தான். அடுத்த சில நாட்களில் நாய்க்குட்டி மீதான பயம் சேகரிடம் கிட்டத்தட்ட நீங்கிவிட்டது.
ஒரு வாரத்தில் நாய்க்குட்டி ஓரளவு வளர்ந்து விட்டது. நாய்க்குட்டியும் கோகுலும் இப்போது ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கியிருந்தார்கள். கோகுல் நாய்க்குட்டிக்கு பால், பிஸ்கெட் எல்லாம் தின்னக் கொடுத்தான். தனது நாய்க்குட்டிக்கு டைகர் என்று பெயரும் வைத்து விட்டான். தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நாயுடன் விளையாடினான். மாலைப் பொழுதில் நாய்க்குட்டியின் தோள்பட்டையை பிடித்தபடி கோகுல் அதை வெளியே அழைத்துச் சென்றான்.
சேகர் மாமா ஊருக்குப் புறப்படும் நாளும் வந்தது. மாமா கோகுலை அழைத்து கோகுல் தெருமுனைக் கடைக்குப் போய் ஒரு சோப் வாங்கிட்டு வா என்றார். மாமாவிடம் காசை வாங்கிய கோகுல் இரண்டு நிமிடத்தில் சோப்பை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.
கோகுல் எப்படி இவ்வளவு சீக்கிரம் சோப் வாங்கிட்டு வந்துட்டே? நீ தெருமுனையில இருக்கிற கடைக்குப் போக மாட்டேன்னு அம்மா சொன்னாளே! இப்போ நீ கடைக்குப் போனப்போது அந்த கறுப்பு நாய் இல்லையா? கோகுலின் மாமா ஒன்றும் அறியாதவர் போலக் கேட்டார்.
அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா மாமா! போன வாரம் வரைக்கும் எனக்கு அந்த நாய் மேல பயம் இருந்தது மாமா. ஆனா இப்போ பயமில்லை. இப்பவும் அந்த கறுப்பு நாய் என் பின்னாலே வந்துச்சு. நான் பிஸ்கெட் வாங்கிப் போட்டேன். பிஸ்கெட்டைச் சாப்பிட்டுட்டு அது என்னைப் பார்த்து வாலை ஆட்டிச்சுது ! என்று பதில் சொன்னான் கோகுல்.
தூரத்துல நாயைப் பார்த்தாலே பயந்து ஓடுகிற உனக்கு எப்படித் தைரியம் வந்துச்சுன்னு தெரியுதா கோகுல்? மாமா கேட்டார்.
தனக்கு எப்படி அந்தத் தைரியம் வந்தது? என்று கோகுலுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. தெரியலை மாமா, எனக்கு எப்படி அந்தத் தைரியம் வந்துச்சு? மாமாவிடம் கேட்டான் கோகுல்.
இங்கே பாரு கோகுல் நீ நாய்க்குப் பயப்படுறதைப் பற்றி அம்மா என்கிட்ட போன்ல சொன்னாங்க. உன்னோட பயத்தைப் போக்கணும்னுதான் நான் ஊரிலயிருந்து நாய்க்குட்டியைக் கொண்டு வந்தேன். நாம எதையோ நினைச்சுப் பயப்படுறோம்னா அதுக்குக் காரணம் அதை விட்டு விலகி நின்று பார்க்கிறதாலதான்! இப்போ நாயை அருகிலேயே பார்த்து பழகிட்டதாலே உனக்கு நாய் மீதான பயம் போயிடுச்சு.
...நீச்சல் கத்துக்கணும்னா முதலில் தண்ணீரைக் கண்டு பயப்படக்கூடாது. சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும்னா சைக்கிளைக் கண்டு பயப்படக்கூடாது. பள்ளிக்கூட பாடம் கூட அப்படித்தான். ஒரு பாடத்தைப் புரிஞ்சுக்கணும்னா அந்தப் பாடத்தைக் கண்டு பயப்படாம நிதானமா ரெண்டு தடவை படிச்சுப் பார்த்தாலே போதும். அது நமக்கு எளிதா மாறிடும்! கோகுல் இந்த உத்தியை நீ வாழ்க்கை முழுவதும் பயன்படுத்துனா எதைக் கண்டும் பயம் தோன்றாது. புரிஞ்சுதா? சேகர் மாமா கேட்...
வாழ்க்கையின் மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டவனாக புரிஞ்சுது மாமா என்றான் கோகுல்.

‡                                                                                                                    கீர்த்தி



1 comment:

  1. Fearing for dogs not only the children's problem but adult too. Advice of 'accham thavir' can be practiced.
    Prabakaran, writer.

    ReplyDelete